சிக்பள்ளாப்பூர் டவுனில் வேறொருவடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது


சிக்பள்ளாப்பூர் டவுனில் வேறொருவடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 April 2021 9:29 PM GMT (Updated: 14 April 2021 9:29 PM GMT)

சிக்கபள்ளாப்பூர் டவுனில் வேறொருவருடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிக்பள்ளாப்பூர்: சிக்கபள்ளாப்பூர் டவுனில் வேறொருவருடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதல் 

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியை சேர்ந்தவர் ஹேமந்த்(வயது 25).இவர் சிக்பள்ளாப்பூர் டவுன் பகத்சிங் நகரில் தங்கி இருந்து தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஹேமந்த்துக்கும், பகத்சிங் நகரில் வசித்து வரும் கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்து வந்த சங்கீதா(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருந்தது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர். 

மேலும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல ஹேமந்த்தும், சங்கீதாவும் வசித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் சங்கீதாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்து ஆத்திரம் அடைந்த ஹேமந்த், சங்கீதாவுடன் தகராறு செய்தார். மேலும் சங்கீதாவின் ஸ்கூட்டருக்கு ஹேமந்த் தீ வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஹேமந்த்தை சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் கைது செய்து இருந்தனர். 

கத்திக்குத்து 

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹேமந்த் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் நேராக சங்கீதாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சங்கீதா  வேறு ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹேமந்த், சங்கீதாவுடன் தகராறு செய்தார். அப்போது ஆத்திரம் அடைந்த ஹேமந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கீதாவை சரமாரியாக குத்தினார். 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்த்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story