மக்களின் உயிரை விட தேர்தல் பிரசாரம் தான் முக்கியம் மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய முழு ஊரடங்கை மோடி அறிவிப்பார் - காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகிறார்


மக்களின் உயிரை விட தேர்தல் பிரசாரம் தான் முக்கியம் மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய முழு ஊரடங்கை மோடி அறிவிப்பார் - காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகிறார்
x
தினத்தந்தி 15 April 2021 2:46 AM GMT (Updated: 15 April 2021 2:56 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் உயிரை விட மேற்கு வங்க தேர்தல் பிரசாரம் தான் முக்கியம் என்று கூறிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, அந்த தேர்தலுக்கு பிறகு நாடு தழுவிய முழு ஊரடங்கை மோடி அறிவிப்பார் என்று குற்றம்சாட்டினார்.

மும்பை,

மராட்டியம் உள்பட நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் 5 மாநில சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.  
இந்தநிலையில் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியை, மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடுமையாக சாடி உள்ளார். 
இது குறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது என்பதை தேசிய அளவில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ தேர்தல் பிரசார கூட்டத்தில் மும்முரமாக உள்ளார். 

அவருக்கு மேற்குவங்க தேர்தல் தான் பிரதான பிரச்சினை. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை. 
மேற்கு வங்கத்தில் தேர்தலை முடித்த பிறகு தான் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பார். 

குறிப்பாக கடந்த 1-ம் தேதி முதல் 10-ந் தேதி வரை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்தது.  இதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முகத்தில் முக கவசம் கூட அணியாமல் பெருமளவு மக்களை கூட்டி பொதுக்கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார். அவர் மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்கிறார். மக்களின் உயிரை விட அவருக்கு தேர்தல் தான் முக்கியம். 

பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கலந்துகொள்வதன் மூலம் அவர் மக்களுக்கு எதை உணர்த்த விரும்புகிறார்?
இவ்வாறு அவர் கூறினார். 

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண தொகுப்பு வழங்க அரசு முன்வரவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த நானா படோலே, “பட்னாவிசுக்கு உண்மையிலேயே டெல்லியில் ஏதேனும் செல்வாக்கு இருந்தால், அவர் மராட்டியத்திற்கு வந்துசேர வேண்டிய ரூ.90 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. மற்றும் பிற திட்டங்களை பெற்றுத்தருவதாக உறுதி வழங்கவேண்டும்” என்றார்.

Next Story