டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 April 2021 8:23 AM GMT (Updated: 15 April 2021 8:34 AM GMT)

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் தற்போது கொரோனா நான்காவது அலையை சந்தித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன் தினம் 13,468 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும், 81 பேர் உயிரிழந்தனர். அதேபோல் டெல்லியில் நேற்று மட்டும் புதிதாக 17,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா தொடங்கியதிலிருந்து அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை ஆகும். மேலும், 104 பேர் கொரோனாவால் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 11,540 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோன பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனிடையே பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தடுப்பூசியை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் வணிக வளாகம், அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் திரையரங்குகளில் 30% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது, பார்சல்களை வழங்க மட்டுமே அனுமதி. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. தற்போதைய தரவுகளின்படி, 5000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story