காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய யூடியூப் சேனல் தொடக்கம்; 24-ந் தேதி முதல் ஒளிபரப்ப திட்டம்


காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய யூடியூப் சேனல் தொடக்கம்; 24-ந் தேதி முதல் ஒளிபரப்ப திட்டம்
x
தினத்தந்தி 15 April 2021 2:52 PM GMT (Updated: 15 April 2021 2:52 PM GMT)

காங்கிரஸ் கட்சி சார்பில் ‘ஐ.என்.சி. டி.வி.’ என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 24-ந் தேதி முதல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

புதிய யூடியூப் சேனல்

காங்கிரஸ் கட்சிக்கென்று தனி சேவை தொடங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இந்நிலையில் ‘ஐ.என்.சி.’ டி.வி. எனப்படும் புதிய யூடியூப் சேனலை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.

சில ஊடகங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அக்கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

24-ந் தேதி முதல் நிகழ்ச்சிகள்

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன் முயற்சியான பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி வருகிற 24-ந்தேதி முதல் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.. தற்போது இந்த சேனல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே ஒளிபரப்பாகும். 8 மணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

இந்த சேனலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்களின் பேட்டிகள், கருத்துகள் ஒளிபரப்பாகும். காங்கிரஸ் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும்.

பிராந்திய மொழிகள்

மேலும் முக்கிய தொலைக்காட்சிகளில் புறக்கணிக்கப்படும் காங்கிரஸ் பற்றிய செய்திகளும், நிகழ்ச்சிகளும் இந்த யூடியூப் சேனலில் முழுமையாக ஒளிபரப்பாகும்.

இதன் தொடக்க விழாவின்போது இந்த யூடியூப் சேனலில் முதல் நிகழ்ச்சியாக சுதந்திர போராட்டத்தில் பத்திரிகையாளராக மகாத்மா காந்தி ஆற்றிய பணிகள் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பத்திரிகைகளில் காந்தி எழுதிய கட்டுரை தொகுப்புகள் காண்பிக்கப்பட்டன.

தங்களது கருத்துகள் மக்களை நேரடியாக சென்று சேரும் விதத்தில் இந்த புதிய யூ டியூப் சேனல் தொடங்கப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது குறித்து ராகுல்காந்தி கூறுகையில், ‘பல்வேறு வகையான கருத்துகள் இந்த சேனலில் ஒளிபரப்பாகும். இந்த யூடியூப் சேனல் படிப்படியாக பிராந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்’ என்றார்.


Next Story