கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் முழு ஊரடங்கு அமல் - மராட்டிய துணை முதல்மந்திரி எச்சரிக்கை


கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் முழு ஊரடங்கு அமல் - மராட்டிய துணை முதல்மந்திரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 April 2021 8:06 PM GMT (Updated: 16 April 2021 8:06 PM GMT)

மராட்டியத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என துணை முதல்மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய மாநிலங்களில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 729 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சத்து 3 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் நேற்று ஒரேநாளில் 45 ஆயிரத்து 335 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 4 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு அம்மாநிலத்தில் நேற்று 398 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்து 551 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மராட்டியத்தில் கடந்த 14-ம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு மே 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

மக்கள் உரிய காரணங்கள் இன்றி பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உரிய காரணங்களுடன் ரெயில், பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலை நேரங்களில் உடற்பயிற்சிக்காக சாலையில் சைக்கிளில் செல்லவும், நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் உரிய காரணமின்றி தங்கள் வாகனங்களில் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

துணிக்கடைகள், புத்தக கடைகள், மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய மாநிலத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், மக்கள் தொடர்ந்து முக்கவசம் அணியாமலும், தேவையின்றி பொதுஇடங்களுக்கு பயணம் மேற்கொண்டும் கட்டுப்பாடுகளை மீறி வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது போல மராட்டியத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று அம்மாநில துணை முதல்மந்திரி அஜித் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story