மேற்குவங்காள தேர்தலில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார் - உத்தவ் தாக்கரே


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 April 2021 5:04 AM GMT (Updated: 18 April 2021 5:04 AM GMT)

ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள தேர்தலில் அவர் பிஸியாக இருக்கிறார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா தாக்கமும் நோயாளிகள் எண்ணிக்கையும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிராவில் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இந்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையில் பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மேற்குவங்காள தேர்தலில் அவர் பிஸியாக இருக்கிறார் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் கொண்டுவந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்ததால் தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கிறது”  என்று உத்தவ் தாக்கரே கூறினார். 

மேலும், மகாராஷ்டிராவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஆக்சிஜனையும் மருத்துவ பயன்பாட்டுக்கு திருப்பி விட்டப்போதும் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எந்த அளவு அதிகரிக்கும் என கணிக்க முடியாது. எனவே இங்கு 3ஆவது அலை ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும் என்பதால் தொழில் நிறுவனங்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயை மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆக்சிஜன் விவகாரத்தில் மாநில அரசுகளின் தேவை தொடர்பாக மத்திய அரசு தினந்தோறும் பேசி வருகிறது. மகாராஷ்டிரா அரசு அதிகபட்ச அளவு ஆக்சிஜனை இதுவரை பெற்றிருக்கிறது. அப்படியிருந்தும் உத்தவ் தாக்கரேயின் இந்த மலிவான அரசியல் வேதனையும், அதிர்ச்சியையும் தருகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story