புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி; 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் அவசியம்


புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி; 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் அவசியம்
x
தினத்தந்தி 19 April 2021 1:22 PM GMT (Updated: 19 April 2021 1:22 PM GMT)

முஸ்லிம்களுக்கு புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக செல்பவர்கள், கொரோனா தடுப்புக்கான 2-வது ஊசியும் செலுத்தி கொள்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது.

ஹஜ் புனித யாத்திரை

சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா, மதீனாவில் ஹஜ் புனித யாத்திரைக்காக இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா பரவலால் உலகம் முழுவதிலும் இருந்து வரும் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் குறைந்து மீண்டும் மறு உருவத்துடன் பரவ தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை வரும் பயணிகளுக்கு சவுதி அரேபியா அனுமதித்து உள்ளது.

புதிய விதிமுறைகள்

இதனால் இந்தியாவில் இருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்களுக்காக இந்திய ஹஜ் கமிட்டி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. ஹஜ் கமிட்டி அறிவிப்பின்படி, இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்ல விரும்புபவர்கள் கொரோனா தடுப்புக்கான இரண்டாவது ஊசியையும் செலுத்தி கொள்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இதை செலுத்தி கொண்டதற்கான மருத்துவ சான்றிதழை அவர்கள் ஹஜ் கமிட்டிக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டி இருக்கும். இந்த ஆண்டு அநேகமாக வரும் ஜூலை 19 அல்லது 20-ல் ஹஜ் யாத்திரை அமைய உள்ளது.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வரையில் ஆகும். சவுதி அரேபியா வருபவர்கள் விமானம் இறங்கியவுடன் 72 மணி நேரம் தனிமைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


Next Story