வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரியை 10% தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு


Image courtesy : Getty Images/iStockphoto
x
Image courtesy : Getty Images/iStockphoto
தினத்தந்தி 20 April 2021 5:55 AM GMT (Updated: 20 April 2021 5:55 AM GMT)

வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவீத இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 2.73 லட்சமாக பதிவாகி உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்றை விட இன்று சற்று குறைந்து உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,54,761 பேர் குணமாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 20,31,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 12,71,29,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் பரிசோதனைகளும் அதிகளவில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 26 கோடியே 94 லட்சத்து 14 ஆயிரத்து 035 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15,19,486 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி வினியோகத்தை அதிகரிக்கும் விதமாக வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான 10 சதவீத இறக்குமதி வரியை தள்ளுபடி செய்ய  உள்ளதாக கூறப்படுகிறது.  

இது தொடர்பாக பேசிய மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், அரசின் தலையீடு இன்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, வெளிச்சந்தையில் விலை வைத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறினார்.

ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட்  ஜான்சன் ஆகியோர் தங்கள் தயாரிப்புகளை இந்தியாவுக்கு விற்க அனுமதிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும்  கொரோனா தடுப்பூசிகளுக்கான  10 சதவீத சுங்க வரியை தள்ளுபடி செய்யும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர்  ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளும், அர்ஜென்டினா மற்றும் பிரேசில் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளும் தடுப்பூசி இறக்குமதி கட்டணங்களை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை விதிக்கின்றன.

Next Story