மே 1-ந் தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது; கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


மே 1-ந் தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது; கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி; பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 20 April 2021 2:29 PM GMT (Updated: 20 April 2021 2:29 PM GMT)

கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்வதாகவும், மே மாதம் 1-ந் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு இன்றி தேர்ச்சி

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தின் மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பெங்களூருவில் உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலையொட்டி பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மதிப்பீட்டு மதிப்பெண்

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநிலத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு இன்றி மாணவர்களை தேர்ச்சி பெற செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித்திறன் செயல்பாடுகளை மதிப்பிட்டு மதிப்பெண் வழங்க வேண்டும். 1 முதல் 5-ம் வகுப்பு வரை எந்த வடிவத்திலும் வகுப்புகள் நடைபெறவில்லை. இவர்களுக்கு மதிப்பீட்டு மதிப்பெண் வழங்க தேவை இல்லை. ஏனென்றால் இவர்களுக்கு கடந்த ஓராண்டில் எந்த வடிவத்திலும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வகுப்புகள் நடைபெறவில்லை.

6 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்களால் பாடம் எடுக்கப்பட்டது. தொலைக்காட்சி, இணைய வழி, ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் அந்த மாணவர்களுக்கு அவர்களின் கற்றறிந்த திறன் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ ஆண்டு இறுதி தேர்வை நடத்தக்கூடாது.

கோடை விடுமுறை

கற்றல் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது தேர்ச்சிக்காக அல்ல. அவர்களின் கற்றல் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவே இந்த மதிப்பீட்டு திறன் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. சரியாக மதிப்பெண் பெறாத மாணவர்கள் மீது அடுத்த வகுப்பில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த இந்த மதிப்பெண் உதவும். இந்த மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் (2021-22) ஒரு தேர்வு நடத்தி அவர்களிடம் உள்ள கற்றல் திறன் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் மாதம் 15-ந் தேதி அடுத்த (2021-22) கல்வி ஆண்டு தொடங்குகிறது. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் ஜூலை மாதம் 14-ந் தேதி வரை கோடை விடுமுறை விடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலஅட்டவணை

வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதி முதல் ஜூலை மாதம் 5-ந் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறும். அதன் பிறகு ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு தொடங்கும். இந்த காலஅட்டவணை தற்காலிகமானது தான். கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story