18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்து கொள்ளலாம் - பதிவு செய்யும் முறை
கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்து கொள்ளலாம் எப்படி பதிவு செய்யவேண்டும்
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 22 லட்சத்து 91 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 104 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 84 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 23 லட்சத்து 30 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்களை அடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. அதுகுறித்த விவரங்கள்:
மே 1ஆம் தேதிமுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 48 மணிநேரத்தில் ’கோவின்’(CoWin) என்ற அரசின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
பதிவு செய்யும் முறை
1. cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
2. பதிவுசெய்ய 'register/sign in yourself'என்பதை க்ளிக் செய்யவும்.
3. உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
4. உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.
5. உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி( Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை
போன்ற மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.
ஆரோக்ய சேது செயலிமூலம் பதிவுசெய்யும் முறை
ஆரோக்ய சேது செயலியின் முன்பக்கத்திலுள்ள கோவின் பக்கத்தை க்ளிக் செய்யவும்
தடுப்பூசி முன்பதிவை செலக்ட் செய்யவும்
மொபைல் எண்ணை டைப் செய்யவும்
ஓடிபியை நிரப்பவும்.
சரிபார்க்க(Verify)வை அழுத்தவும்
அங்கிருந்து தடுப்பூசி முன்பதிவு பக்கத்திற்கு சென்றுவிடும். பிறகு கோவின் செயலிக்கு குறிப்பிட்டதைப் போன்றே பதிவுசெய்யவும்.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருமே 2வது டோஸ் தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் எடுத்திருக்கவேண்டும் என கோவின் இணையதளம் கூறுகிறது.
Related Tags :
Next Story