ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 22 April 2021 8:51 PM GMT (Updated: 22 April 2021 8:51 PM GMT)

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு வழங்க ஆக்சிஜன் கிடைப்பதில்லை. எனவே ஆக்சிஜன் தயாரிப்பை தீவிரப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்தநிலையில் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் இடைக்கால மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசு அனுமதி

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே, ‘வேதாந்தாவின் இடைக்கால மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திகூடத்தை செயல்பட அனுமதித்தால் 5 அல்லது 6 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க முடியும். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்’ என முறையிட்டார்.

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘நாடு தற்போது ஆக்சிஜன் தேவையை கடுமையாக எதிர்நோக்கி உள்ளது. சுகாதார தேவைகளுக்கு மட்டும் வேதாந்தா நிறுவனம் அதன் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யட்டும்’ என வாதிட்டார்.

தமிழக அரசு எதிர்ப்பு

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், ‘வேதாந்தாவின் இடைக்கால மனு இன்று (நேற்று) காலைதான் கிடைக்கப்பெற்றது. மனு தொடர்பாக பதில் அளிக்கும் வகையில் வழக்கை அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காக ஆலை மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாத சூழல் உள்ளது. ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. இருப்பினும் இடைக்கால மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி குறித்த கோரிக்கை தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நாளை (இன்று) தெரிவிப்போம்’ என்றார்.

மனித உயிர்கள் முக்கியம்

இதற்கு தலைமை நீதிபதி, ‘ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கோரும் வேதாந்தா நிறுவனத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் தமிழக அரசின் நிலைப்பாடு போற்றும் வகையில் இல்லை’ என தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘சுற்றுச்சூழல் விவகாரங்களை காட்டிலும் மனித உயிர்கள் தற்போதைய சூழலில் மிக முக்கியமானவையாக உள்ளன’ என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வேதாந்தாவின் இடைக்கால மனு மீதான விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என தெரிவித்தனர்.

 


Next Story