கொரோனா கட்டுப்பாடுகளை மீறி காதலியை சந்திக்க விரும்பிய இளைஞர்களுக்கு, மும்பை போலீசாரின் பக்குவமான பதில்


கொரோனா கட்டுப்பாடுகளை மீறி காதலியை சந்திக்க விரும்பிய இளைஞர்களுக்கு, மும்பை போலீசாரின் பக்குவமான பதில்
x
தினத்தந்தி 22 April 2021 11:52 PM GMT (Updated: 22 April 2021 11:52 PM GMT)

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி காதலியை சந்திக்க விரும்பிய இளைஞர்களுக்கு மும்பை போலீசார் பக்குவமாய் பதில் அளித்தனர். காதலர்களான நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர்.

காதலியை சந்திக்க விருப்பம்

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவிவருகிறது. எனவே மாநிலத்தில் நோய் பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக பார்க்காமல் இருக்கும் காதலியை பார்க்க விரும்பிய வாலிபர்களுக்கு மும்பை போலீசார் அளித்த பக்குவமான பதில் நெட்டிசன்களை கவர்ந்து உள்ளது. மும்பை போலீசாரின் டுவிட்டர் கணக்கை 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

போலீசார் பதில்

இந்தநிலையில் நேற்று அஸ்வின் வினோத் என்ற வாலிபர் காதலியை சந்திக்க டுவிட்டர் மூலமாக போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தார். அதில் வாலிபர், “நான் எனது காதலியை பிரிந்து தவிக்கிறேன். எனவே அவரை பார்க்க நான் எனது வாகனத்தில் எந்த ஸ்டிக்கரை ஒட்டிச்செல்ல வேண்டும்” என கேட்டு இருந்தார். (அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களுக்கு வேறு வேறு வண்ணங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை அமலில் உள்ளது). வாலிபரின் இந்த கேள்விக்கு போலீசார் லத்தியை எடுத்து சுழற்றுவது போல அல்லாமல், வாழைப்பழத்தில் ஊசியை குத்துவது போல பதில் அளித்து இருந்தனர்.

போலீசார் அந்த வாலிபருக்கு, “காதலியை சந்திப்பது உங்களுக்கு அத்தியாவசியமானது என்பதை நாங்கள் உணர்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்களின் அத்தியாவசிய அல்லது அவசர பட்டியலில் அது வரவில்லை. தூரத்தில் இருப்பது இருமனங்களுக்கு இடையே அன்பை வளர்க்கும். தற்போது நீங்கள் நலமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். தற்போதைய கட்டுப்பாடுகள் தற்காலிகமானது தான். பொறுத்து இருங்கள் ” என கூறியுள்ளனர்.

மற்றொரு வாலிபர்

இதேபோல காதலியை சந்திக்க விரும்பிய மற்றொரு வாலிபருக்கு போலீசார் அளித்த பதிலில், “கொரோனா காலத்தில் நீங்கள் முன்எச்சரிக்கையுடன் இருப்பதை மதிப்பவர்களே உண்மையான காதலர்களாக இருக்க முடியும். நீங்கள் வீட்டிலேயே இருப்பதை உங்கள் காதலியே ஒப்புக்கொள்வார் என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்” என கூறியுள்ளனர்.

போலீசாரின் இந்த பக்குவமான பதில்கள் நெட்டிசன்களிடம் அமோக ஆதரவை பெற்றுள்ளன. போலீசாரின் இந்த பதில்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதேபோல பலர் போலீசாரின் பதிலுக்கு பாராட்டு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story