தேவையற்ற திட்டங்களுக்கு பதிலாக ‘சுகாதார துறையில் கவனம் செலுத்துங்கள்’; மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்


தேவையற்ற திட்டங்களுக்கு பதிலாக ‘சுகாதார துறையில் கவனம் செலுத்துங்கள்’; மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2021 8:50 PM GMT (Updated: 24 April 2021 8:50 PM GMT)

தேவையற்ற திட்டங்களில் செலவு செய்வதற்கு பதிலாக சுகாதார துறையில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

ராகுல் டுவிட்டர் பதிவு
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இந்த தருணத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்குமத்தியில், மக்கள் தொடர்பு மற்றும் தேவையற்ற திட்டங்களில் செலவு செய்வதற்கு பதிலாக தடுப்பூசிகள், ஆக்சிஜன், இன்னபிற சுகாதார சேவைகளில் (மத்திய அரசு) கவனத்தை செலுத்துங்கள். இனி வரும் நாட்களில் நெருக்கடி தீவிரம் அடையும். அதை சமாளிக்க நாடு தயாராக வேண்டும். தற்போதைய அவல நிலை, தாங்க முடியாதது.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

மத்திய அரசின் புதிய தலைமைச் செயலகத்துக்கு முதல் 3 கட்டிடங்களை ரூ.3,406 கோடி செலவில் கட்டுவதற்கு மத்திய அரசு டெண்டர் விட்டிருப்பதையொட்டிய செய்தியையும் தனது பதிவுடன் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.

டெல்லி அரசுக்கு கோரிக்கை
மேலும், டெல்லி ஜெய்ப்பூர் கோல்டன் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் இரவில் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளதையொட்டி ராகுல் காந்தி டுவிட்டரில் மற்றொரு பதிவை 
வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில் அவர், “ஜெய்ப்பூர் கோல்டன் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல நோயாளிகள் இறந்துள்ளதாக வந்துள்ள செய்தி மிகவும் துயரமானது. இறந்தவர்களின் 
குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மாநில அரசையும், காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

Next Story