ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 26 April 2021 11:27 PM GMT (Updated: 26 April 2021 11:27 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி,


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இதுநாள் வரை விசாரித்தது.

கடந்த விசாரணையின்போது, ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் சூழலில், சட்டம்-ஒழுங்கு சூழலை காரணம் காட்டி ஆக்சிஜன் தயாரிக்க முடியாது என மாநில அரசு கூறுகிறது. மக்கள் மடிந்துகொண்டிருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக பிரமாணபத்திரத்தை தமிழக அரசு திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 26-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை முழுத்திறனுடன் இயக்க, பயிற்சி பெற்ற, குறைந்தபட்சம் பத்தாண்டு துறைசார் அனுபவம் உள்ள 45 நபர்கள் தேவை. இந்த ஆக்சிஜன் உற்பத்திக்கூடம் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.2 கோடி பராமரிப்பு செலவாகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு நியமிக்கும் அமைப்பின் கண்காணிப்பின்கீழ், தெரிவிக்கப்படும் காலம் வரை ஆக்சிஜன் உற்பத்திக்கூடத்தை வேதாந்தா நிறுவனம் ஏற்று நடத்தத் தயாராக உள்ளது என தெரிவித்து வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று காலை 11 மணிக்கு விசாரிக்கிறது.

Next Story