கொரோனா பரவல் அதிகரிப்பு: இந்தியாவுக்கு 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க அமெரிக்கா உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 April 2021 1:28 PM GMT (Updated: 27 April 2021 1:28 PM GMT)

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளநிலையில், 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு அவசரமாக தேவைப்படும் 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை இந்தியாவுக்கு வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா சிகிச்சைகாக அவசர கால அடிப்படையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்க உரிமம் பெற்ற 7 இந்திய மருந்து ஆலைகள் தங்கள் உற்பத்தியை அதிகரித்திற்கும் நிலையில், மேலும் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்துவதற்கான உரிமத்தை வழங்குவதாக அமெரிக்க மருந்து நிறுவனமான கிலியட் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிலியட் நிறுவன தலைமை வணிக அதிகாரி ஜொகானா மெர்சியர் கூறுகையில், “இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க நாங்கள் துணை நிற்கிறோம். இருதரப்பின் இந்த முயற்சியினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ரெம்டெசிவிர் மருந்தின் நன்மைகளை விரைவில் பெறுவர்” என்று தெரிவித்தார்.  

கிலியட் நிறுவனத்தின் வாலண்டியர் லைசன்சிங் புரோகிராம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 23 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story