பிரான்ஸ் நாட்டின் மருத்துவபொருட்களை உள்ளடக்கிய விமானம் இந்தியா வந்தடைந்தது


பிரான்ஸ் நாட்டின் மருத்துவபொருட்களை உள்ளடக்கிய விமானம் இந்தியா வந்தடைந்தது
x
தினத்தந்தி 2 May 2021 3:30 AM GMT (Updated: 2 May 2021 3:30 AM GMT)

பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றி வந்த விமானம் அதிகாலையில் இந்தியா வந்தடைந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவின் 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா உட்பட 40 நாடுகள் இந்தியாவிற்கு தேவைப்படுகின்ற மருத்துவ உபகரணங்களையும், தடுப்பூசிகளையும், ஆக்சிஜன் உட்பட அனைத்து விதமான அவசர தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாடு இந்தியாவுடனிருக்கும் சகோதரத்துவத்தை வெளிக்காட்டும் விதமாக உலகத் தரமுடைய 8 ஆக்சிஜன் ஆலைகள் உட்பட 28 டன் அளவிலான மருத்துவ உபகரணங்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடையும் என்று இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டின் தூதர் இம்மானுவேல் லெனெய்ன் தெரிவித்திருந்தார். மேலும் அவர் 8 இந்திய மருத்துவமனைகளில் குறைந்தபட்சமாக அடுத்த 10 வருடங்களுக்கு தாராளமாக ஆக்சிஜனை வழங்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை ஏற்றி வந்த விமானம் அதிகாலையில் இந்தியா வந்தடைந்தது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இம்மானுவேல் லெனெய்ன், “அனைத்து பிரெஞ்சு நிறுவனங்களும் & பிரான்சில் உள்ள பலரும் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுடனான ஒற்றுமையைக் காட்ட விரும்புகிறார்கள், எனவே நாங்கள் கூடுதல் நிதிகளை திரட்டியுள்ளோம், மேலும் இந்திய மருத்துவமனைகளுக்கு சுயாட்சியைக் கொண்டுவருவதற்காக இதுபோன்ற உபகரணங்களுடன் மாத இறுதிக்குள் மற்றொரு விமானத்தை நாங்கள் கொண்டுவர உள்ளோம். 

இந்தியாவுக்கு உதவி வழங்க நாங்கள் அமைச்சகம் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த ஆண்டு இந்தியா எங்களுக்கு உதவியது. உங்கள் நாடு சிரமத்தை சந்தித்து வருவதால் இப்போது ஒற்றுமையைக் காட்ட நாங்கள் விரும்பினோம். கொரோனா நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து பிரான்ஸ் வழங்கிய மிகப்பெரிய தொகுப்பு இது” என்று அவர் தெரிவித்தார். 

Next Story