கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை


கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
x
தினத்தந்தி 3 May 2021 6:36 AM GMT (Updated: 3 May 2021 6:55 AM GMT)

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக்கோரி முன்னாள் அமைச்சரும், கரூர் அ.தி.மு.க வேட்பாளருமான விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரசாரம் செய்ய அனுமதித்ததே தொற்று பரவலுக்கான காரணம். இதற்காக தேர்தல் கமிஷன் மீது கொலை வழக்கு சுமத்தினாலும் தவறில்லை’ என கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரனை இன்று நடைபெற்றது.

அப்போது கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள். உள்நோக்கத்துடன் ஐகோர்ட்  கருத்து கூறவில்லை, கருத்துக்களை சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

Next Story