மேற்கு வங்காள தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வின் அகங்காரமே காரணம்; சிவசேனா விமர்சனம்


மேற்கு வங்காள தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வின் அகங்காரமே காரணம்; சிவசேனா விமர்சனம்
x
தினத்தந்தி 4 May 2021 6:28 PM GMT (Updated: 4 May 2021 6:28 PM GMT)

பா.ஜ.க.வின் அகங்காரம், ஆணவம்தான் மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி தோல்வி அடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

பா.ஜ.க. தோல்வி

மேற்கு வங்காளத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்கிறது. இந்ததேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியளித்த பா.ஜ.க. 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தோல்வி அடைவதற்கான காரணங்கள் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சகிப்பின்மை

மேற்கு வங்காள தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று பா.ஜ.க.வின் அகங்காரம், ஆணவ போக்குதான். மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்து இறங்கியதற்கு கூட அந்த கட்சியின் சகிப்பின்மை போக்குதான் காரணம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பல், மேற்கு வங்காள தேர்தலில் வென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், மம்தா பானர்ஜியையும் பாராட்டிபேசினார். ஆனால், இதைக்கூட சகிக்க முடியாத பா.ஜ.க. மாநிலதலைவர் சந்திகாந்த் பாட்டீல் கடுமையாக விமர்சித்துள்ளார். புஜ்பல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை புகழ்ந்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது.

விரக்தி

மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட தோல்வியால் விரக்தி அடைந்த பா.ஜ.க.வால் மராட்டிய மாநிலத்தில் பந்தர்பூர் இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை கொண்டாட மனது வரவில்லை. பந்தர்பூர் சட்டப்பேரவை தேர்தலில் மகாவிகாஸ் அகாதியின் வேட்பாளர் தோற்றுவிட்டார். இருப்பினும் மகாவிகாஸ் அகாதியை சேர்ந்த அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாழ்த்து கூறினார்கள். ஆனால், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தவர்களை மகாவிகாஸ்த அகாதி கூட்டணியை சேர்ந்த யாரும் மிரட்டவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story