மேலும் 3.57 லட்சம் பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 கோடியாக அதிகரிப்பு


மேலும் 3.57 லட்சம் பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 கோடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 6:37 PM GMT (Updated: 4 May 2021 6:37 PM GMT)

இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது.

தினசரி பாதிப்பில் சரிவு

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15½ கோடியை தாண்டிய நிலையில் இதுவரை இந்த நோய்க்கு 32½ லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 13.16 கோடிக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. இதில் உச்சபட்சமாக கடந்த 1-ந்தேதி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது.

எனினும் மறுநாளே இது குறைய தொடங்கியது. இது நேற்று மீண்டும் சரிந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 57 லட்சத்து 229 என்ற அளவிலேயே இருந்தது.

2 கோடியாக அதிகரிப்பு

புதிதாக பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்து விட்டது. அதாவது. 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 பேர் இதுவரை கொரோனாவின் கொடூர கரங்களில் சிக்கியிருக்கின்றனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மராட்டியத்தில் 48 ஆயிரத்து 621 பேரும், கர்நாடகாவில் 44 ஆயிரத்து 438 பேரும் அடங்குவர். மேலும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 29 ஆயிரத்து 52 பேருக்கும், கேரளாவில் 26 ஆயிரத்து 11 பேருக்கும், தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பலி

இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 449 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக உயர்ந்திருக்கிறது. எனினும் தேசிய பலி விகிதம் 1.10 சதவீதமாக குறைந்திருக்கிறது.

நேற்று அதிகபட்சமாக மராட்டியத்தில் 567 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் 448 பேரும், உத்தரபிரதேசத்தில் 285 பேரும், சத்தீஷ்காரில் 266 பேரும், கர்நாடகாவில் 239 பேரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

பரிசோதனை

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 16 லட்சத்து 63 ஆயிரத்து 742 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை 29 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 779 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

3.20 லட்சம் பேர் மீண்டனர்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 பேர் கொரோனாவை வென்று உயிர் பிழைத்திருக்கின்றனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உயர்ந்தது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 81.91 ஆக இருக்கிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால், சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்பில் 17 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர்.


Next Story