சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஐகோர்ட்டில் மனு


சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 5 May 2021 12:10 AM GMT (Updated: 5 May 2021 12:10 AM GMT)

தனக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த ஊழல் வழக்கை ரத்து செய்ய கோரி அனில் தேஷ்முக் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளார்.

சி.பி.ஐ. வழக்கு

முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் கார் வெடிகுண்டு நிறுத்தப்பட்ட வழக்கின் விசாரணையை தவறான பாதைக்கு கொண்டு சென்றதாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் அப்போது உள்துறை மந்திரியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அனில்தேஷ்முக் மீது பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அதில் அவர், அனில்தேஷ்முக் மும்பை போலீசாரை மாதந்தோறும் ஓட்டல், பார்களில் இருந்து ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை சி.பி.ஐ. ஆரம்பகட்ட விசாரணை நடத்தியது. இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி ஊழல் தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அனில்தேஷ்முக் மீது வழக்குப்பதிவு செய்தது.

ஐகோர்ட்டில் மனு

இந்தநிலையில் முன்னாள் உள்துறை மந்திாி அனில்தேஷ்முக் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், தன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சி.பி.ஐ. அவர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அனில்தேஷ்முக் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, மனிஷ் பிதாலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story