‘‘நாட்டுக்கு தேவை சுவாசம்தான், பிரதமரின் புதிய வீடு அல்ல’’ - ராகுல்காந்தி கருத்து


‘‘நாட்டுக்கு தேவை சுவாசம்தான், பிரதமரின் புதிய வீடு அல்ல’’ - ராகுல்காந்தி கருத்து
x
தினத்தந்தி 10 May 2021 4:25 AM GMT (Updated: 10 May 2021 4:25 AM GMT)

பிரதமரின் புதிய வீடு, நாட்டுக்கு தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், நாடாளுமன்ற புதிய கட்டிடம், மத்திய செயலகம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளும், ராஜபாதை சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘சென்டில் விஸ்டா’ என்ற இத்திட்டம் ரூ.13 ஆயிரத்து 450 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும்போது, ‘அத்தியாவசிய பணிகள்’ என்ற அந்தஸ்துடன் இந்த திட்டத்தை மேற்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று இந்த திட்டத்தை விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். அத்துடன், ‘சென்டிரல் விஸ்டா’ கட்டுமான பணிகள் நடக்கும் புகைப்படத்தையும், ஆக்சிஜன் நிரப்ப சிலிண்டருடன் மக்கள் வரிசையில் காத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘நாட்டுக்கு தேவை, சுவாசம்தான். பிரதமரின் புதிய வீடு அல்ல’’ என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். மேலும், கிராமப்பகுதிகளிலும் கொரோனா பரவி வருவதாக மற்றொரு பதிவில் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அதில், ‘‘நகரங்களை தொடர்ந்து, தற்போது கிராமங்களும் கடவுளைத்தான் நம்பி இருக்க வேண்டும்’’ என்று அவர் கூறியுள்ளார்.

Next Story