தேசம் மூச்சுவிட திணறும்போது மாற்று யதார்த்தம் குறித்து பேசுகிறார்; மத்திய மந்திரி மீது சசி தரூர் குற்றச்சாட்டு


தேசம் மூச்சுவிட திணறும்போது மாற்று யதார்த்தம் குறித்து பேசுகிறார்; மத்திய மந்திரி மீது சசி தரூர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 May 2021 1:54 PM GMT (Updated: 10 May 2021 1:54 PM GMT)

இந்தியா கொரோனா வைரசின் பிடியில் சிக்கி, மூச்சு விட திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் இல்லை

இந்தியாவில் கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்தார். மத்திய மந்திரி ஹர்ஷவர்தனை டுவிட்டரில் டேக் செய்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில், “மத்திய சுகாதாரத்துறை மந்திரியை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த தேசம் கொரோனா பிடியில் சிக்கி மூச்சுவிட திணறும் போது, இந்தியர்கள் பாதிக்கப்படுவதை பார்த்து உலகம் வேதனைப்படும்போது, அவர் மாற்று யதார்த்தம் குறித்து பேசுகிறார்” என கூறினார்.

சில நாட்களுக்கு முன் ஹர்ஷவர்தன், 3-வது கட்ட தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யும் கோவின் தளம் குறித்து புகழ்ந்திருந்தார். அதில் 3 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள், 1.45 கோடி எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார்.

விளக்கம்

இதை சுட்டிக்காட்டி, ஹர்ஷவர்தனை விமர்சித்து சசி தரூர் மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அதிகமான எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுவது என்பது கொரோனா வைரசை வென்று விட்டதற்கான அடையாளமா?. பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மாத்திரையை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிமுகம் செய்தமைக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு விளக்கம் கேட்டது. அந்த விளக்கத்தை கேட்க நானும் தயாராக இருக்கிறேன், தேசமும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

தடுப்பூசி

மத்திய அரசு பட்ஜெட்டில் தடுப்பூசிக்காக ஒதுக்கீடு செய்த ரூ.35 ஆயிரம் கோடியை ஏன் செலவிடவில்லை. இந்த பணத்தை பயன்படுத்தி, மாநிலங்களுக்கு தடுப்பூசி வாங்கலாமே. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபின் ஏன் பணத்தை செலவிடாமல் மத்திய அரசு அமர்ந்திருக்கிறது.

ஜி.எஸ்.டி. வருவாய் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலில் வரி வருவாய் கொட்டுகிறது. ஆதலால் தடுப்பூசி வாங்குங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story