இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலி; தினமும் 1,000 பேர் பாதிப்பு


இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலி; தினமும் 1,000 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 10 May 2021 4:50 PM GMT (Updated: 10 May 2021 4:50 PM GMT)

இந்தியாவில் இதுவரை 1,952 ரெயில்வே ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், தினமும் சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும் ரெயில்வே கூறியுள்ளது.

ரெயில்வே வாரிய தலைவர்

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வீரியமாக பரவி வருகிறது. இந்த ஆட்கொல்லி வைரசின் கொடூர தாக்குதலுக்கு எந்தவித பேதமும் இன்றி அனைத்து பிரிவினரும் சிக்கி வருகின்றனர். இதில் ரெயில்வே ஊழியர்களும் விதிவிலக்கல்ல.

உலக அளவில் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக விளங்கும் இந்திய ரெயில்வேயில் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களில் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருவதாக ரெயில்வே வாரியம் கூறியுள்ளது.

இது குறித்து வாரிய தலைவர் சுனீத் சர்மா கூறியதாவது:-

தொற்றுக்கு ஆளாகும் ஊழியர்கள்

கொரோனாவை பொறுத்தவரை நாட்டின் பிற மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் இருந்து ரெயில்வேயும் வேறுபட்டது அல்ல. நாங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறோம். போக்குவரத்து பணிகளை செய்து வரும் நாங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை நடத்தியாக வேண்டும். இத்தகைய பணிகளின்போது நாள்தோறும் சுமார் 1,000 ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.

4 ஆயிரம் படுக்கைகள் நிரம்பின

எங்களுக்காக தனி மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறோம். ரெயில்வே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை ஏற்படுத்தி இருக்கிறோம். எங்கள் ஊழியர்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். தற்போதைய நிலையில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுகளால் 4 ஆயிரம் படுக்கைகள் நிரம்பியுள்ளன. அவர்களை விரைவில் குணப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

ரெயில்வேயின் கவலை

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நேற்று (நேற்று முன்தினம்) வரை 1,952 ஊழியர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ரெயில்வே கவலை கொண்டுள்ளது. எனினும் இந்த அச்சுறுத்தலை குறைக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு சுனீத் சர்மா தெரிவித்தார்.

பியூஸ் கோயலுக்கு கடிதம்

முன்னதாக கொரோனாவில் உயிரிழக்கும் ரெயில்வே ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கு இணையான இழப்பீடு வழங்குமாறு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு அனைத்திந்திய ரெயில்வே ஊழியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது. இதுவரை 1 லட்சத்துக்கு அதிகமாக ரெயில்வே ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும், அதில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்திருப்பதாகவும் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 


Next Story