கோவிஷீல்டு தடுப்பூசி: கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் - இங்கிலாந்து சுகாதாரத் துறை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2021 6:26 PM GMT (Updated: 11 May 2021 6:34 PM GMT)

ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் ஒரு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குள் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை திரட்டிய ஆய்வாளர்கள், தடுப்பூசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். முடிவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோசானது இறப்புக்கான வாய்ப்பை 80 சதவீதம் குறைப்பது தெரியவந்துள்ளது. 

ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்தத் தடுப்பூசியைத்தான் சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பைசர் தடுப்பூசியின் ஒரு டோசை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் 80 சதவிகிதமும், இரண்டு டோசை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் 97 சதவிகிதமும் குறைவதாகப் இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை மையம் தெரிவித்துள்ளது.

Next Story