நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்


நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்
x
தினத்தந்தி 11 May 2021 10:20 PM GMT (Updated: 11 May 2021 10:20 PM GMT)

சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டநிலையில், நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவில் இருந்து மீண்டார்.

மும்பை, 

மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியா நாட்டில் சிக்கினார். இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் நாடு கடத்தி வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

61 வயதான அவருக்கு கடந்த மாதம் 22-ந் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து 24-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால் இதை திகார் சிறை நிர்வாகம் மறுத்தது.

இந்தநிலையில் சோட்டா ராஜன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளார். எனவே அவர் நேற்று திகார் சிறைக்கு திரும்பியதாக சிறைத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story