இந்தோனேசியாவில் இருந்து 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு


இந்தோனேசியாவில் இருந்து 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 13 May 2021 4:00 AM GMT (Updated: 13 May 2021 4:00 AM GMT)

இந்தோனேசியாவில் இருந்து 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் இந்தோனேசியாவில் இருந்து 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்தோனேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகரிக இணைப்புகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில் இந்த உதவி அமைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்‌ஷி தெரிவித்துள்ளார்.

Next Story