நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழப்பு


நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழப்பு
x

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி,

கொரோனாவின் முதல் அலையை வெற்றிகரமாக சமாளித்து விட்ட இந்தியா, 2-வது அலையில் இருந்து மீள்வதற்காக தனது ஆவேசப்போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனாவும் ‘விட்டேனா பார்’ என்று சொல்கிற விதத்தில் ஒரே வாரத்தில் 5-வது முறையாக நேற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தனது கோரப்பிடியின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு 4 வது நாளாக இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,37,03,665 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,58,317 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,52,181 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,34,823 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,10,525 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 17,72,14,256 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story