கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்


கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்
x
தினத்தந்தி 14 May 2021 12:20 AM GMT (Updated: 14 May 2021 12:20 AM GMT)

கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவின் மோசமான பிடியில் 10 மாநிலங்கள் சிக்கி உள்ளன. அவை மராட்டியம், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகும்.

இந்த மாநிலங்கள்தான் தினசரி பாதிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. நேற்றும் இவை 72 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன.

கொரோனாவால் நேற்று பலியானோர் எண்ணிக்கையிலும் 10 மாநிலங்களே முக்கிய பங்கு ( 74.30 சதவீதம்) வகிக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் பேச முடிவு

இந்தநிலையில் கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 18-ந் தேதியும், 20-ந் தேதியும் 2 கட்டங்களாக பிரதமர் மோடி இந்த கலந்துரையாடலை நடத்துகிறார்.

நாடு கொரோனாவுக்கு எதிராகப்போராடி வரும் நிலையில் இப்படி மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேசப்போவது இதுவே முதல் முறை ஆகும்.

முதல் கட்டமாக 18-ந் தேதியன்று, 9 மாநிலங்களின் 46 மாவட்ட கலெக்டர்களுடனும், 2-வது கட்டமாக 20-ந் தேதியன்று 54 மாவட்ட கலெக்டர்களுடனும் மோடி பேசுகிறார்.

இது காணொலி காட்சி வழியாக நடைபெறும்.

எதிர்பார்ப்பு

அப்போது பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் தற்போதைய தொற்று பரவல் நிலவரத்தையும், சுகாதார கட்டமைப்பு வசதிகளையும் கேட்டறிவதோடு, கட்டுப்படுத்துவதற்கு சில ஆலோசனைகளை பிரதமர் மோடி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story