ஒரு நுரையீரல் மட்டுமே இருந்தாலும் சுவாச பயிற்சிகள் செய்து கொரோனாவில் இருந்து மீண்ட நர்ஸ்


ஒரு நுரையீரல் மட்டுமே இருந்தாலும் சுவாச பயிற்சிகள் செய்து கொரோனாவில் இருந்து மீண்ட நர்ஸ்
x
தினத்தந்தி 14 May 2021 1:13 PM GMT (Updated: 14 May 2021 1:13 PM GMT)

ஒரு நுரையீரல் மட்டும் கொண்டிருந்த போதிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து நம்பிக்கையுடன் போராடி மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் ஒருவர் குணமடைந்தார்.

கொரோனாவின் கோர முகம்

உலகம் முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காட்டி ஒரு பக்கம் உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் அதே நேரத்தில் பலரும் அதனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக குணமடைந்து வருவது தொற்று மீதான அச்சத்தை போக்கி கொரோனாவில் இருந்து மீளக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நர்ஸ் ஒருவர் சிறுவயதிலேயே ஒரே ஒரு நுரையீரலுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நம்பிக்கை அளிக்கும் விதமாக தொற்றில் இருந்து மீண்டு வந்து பிறருக்கு உத்வேகம் அளித்திருக்கிறார்.

ஒரு நுரையீரல்

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 39 வயதாகும் பிரபுலித் பீட்டர் என்ற அந்த நர்ஸ் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஒரே ஒரு நுரையீரல் மட்டும் தான் உள்ளது என்பதால் அவருக்கு கொரோனாவுக்கு எதிரான போராட்டம் சவால் மிகுந்த ஒன்றாக இருக்கும் என பலரும் வருத்தம் அடைந்தனர். இருப்பினும் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்த பிரபுலித் பீட்டர், வெற்றிகரமாக கொரோனாவை வென்று குணமடைந்தார்.

நம்பிக்கையை இழக்கவில்லை

இது குறித்து பிரபுலித் பீட்டர் கூறுகையில், ‘வீட்டு தனிமையில் இருந்த போது நான் நம்பிக்கையை இழக்கவில்லை. யோகா, பிராணயாமா, சுவாச பயிற்சிகள் போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன். மேலும் நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் பலூன்களை ஊதி வந்தேன். ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டிருந்ததால் எப்படியும் தொற்றில் இருந்து மீளுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது’ என்றார்.

குழந்தை பருவத்தில் ஒரு சாலை விபத்தில் இவருடைய ஒரு நுரையீரலை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். இருப்பினும் 2014-ம் ஆண்டு சிகிச்சை ஒன்றுக்காக எக்ஸ்ரே எடுத்த போது தான் தனக்கு ஒரு நுரையீரல் மட்டுமே இருப்பதை பிரபுலித் பீட்டர் தெரிந்து கொண்டார்.

நர்ஸ் பிரபுலித் பீட்டர் கொரோனாவை தன்னம்பிக்கையுடன் வென்றிருப்பது பிறருக்கும் உத்வேகம் அளிப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது.


Next Story