கொரோனாவை கட்டுப்படுத்த உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி, உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 098 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்து 72 ஆயிரத்து 907 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் 3,890 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,66,207 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 36,73,802 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது மற்றும், கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலைமை பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள நோயாளிகளின் உயிரிழப்பு மிகப்பெரிய சவாலாக உருவாகி உள்ளது. மேலும் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளநிலையில் தற்போது இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story