தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த‌து மத்திய நீர்வளத்துறை ஆணையம்


தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த‌து மத்திய நீர்வளத்துறை ஆணையம்
x
தினத்தந்தி 15 May 2021 10:40 AM GMT (Updated: 15 May 2021 10:40 AM GMT)

தக்தே புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மராட்டியம் மாநிலங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் குழு விரைந்துள்ளது.


தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. 

அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (சனிக்கிழமை) காலை புயலாக உருவானது. அடுத்த  3 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குஜராத் கடற்கரையில் போர்பந்தர் - நலியா இடையே  வரும் செவ்வாய்க்கிழமை புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தக்தே புயல் காரணமாக  கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மராட்டியம் மாநிலங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் குழு விரைந்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை மிக மிக கனமழை பெய்யும் எனவும் இதனால், வெள்ள  பாதிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே, தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத்துறை  வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த‌து. கன்னியாகுமரி, கோதையாற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story