குஜராத்தை இன்று தாக்கும் ‘டவ்தே’ புயல்... மும்பை ஏர்போர்ட் மூடப்பட்டது


குஜராத்தை இன்று தாக்கும் ‘டவ்தே’ புயல்... மும்பை ஏர்போர்ட் மூடப்பட்டது
x
தினத்தந்தி 17 May 2021 10:03 AM GMT (Updated: 17 May 2021 10:03 AM GMT)

டவ்தே புயலானது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் குஜராத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்கு ‘டவ்தே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த புயல் தீவிர புயலாக மாறி,  கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

டவ்தே புயல் நேற்று அதிதீவிர புயலாக மாறியது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழை பெய்யும். குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மராட்டிய மாநில  கடலோர பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. மும்பையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது. புயலின் காரணமாக மும்பை விமான நிலையம் 11 மணிக்கு மூடப்பட்டது. பந்த்ரா-ஒர்லி கடல்வழிப் பாதையும் மூடப்பட்டது. 

ராய்காட்டில் புயல் தொடர்பான விபத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், 2 பேர் காயமடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 8000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடலோர பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. புயல் மழை தொடர்பான விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

குஜராத்தில் திங்கள்கிழமை காலை வரை, 21 மாவட்டங்களைச் சேர்ந்த 84 தாலுகாக்கள் மிதமான மழை பெய்துள்ளன. இவற்றில் 6 தாலுகாக்களில் 1 அங்குல மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், டவ்தே புயலானது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் குஜராத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர்பந்தருக்கும் மகுவாவுக்கும் இடையே கரை கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 165 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போர்பந்தர்-மகுவா இடையே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 25 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

போர்பந்தர், அம்ரேலி, ஜுனாகர், கிர் சோம்நாத், போதத் மற்றும் அகமதாபாத்தின் கடலோரப் பகுதிகளில் புயலால் அதிக அளவில் சேதம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. மின்கம்பங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்களும் சேதம் அடையும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரெயில் பாதைகள் மற்றும் சிக்னல் அமைப்புகளும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய பயிர்களுக்கும் சேதம் ஏற்படும்.

இந்தநிலையில், டவ்தே புயலை சமாளிப்பது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். 

டவ்தே சூறாவளி காற்றுடன் குஜராத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், கோவா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா சிகிச்சையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தொடர்புடைய மாநில அதிகாரிகளுடன் அமித் ஷா காணொலியில் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.

புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் இயற்கை சீற்றங்களால், கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி இருப்பு வசதிகள், தீவிர சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் ஆகியோரின் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

ஆக்சிஜன் வசதிக்காக தற்காலிக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை உறுதியான கட்டிடங்களுக்கு மாற்றுமாறு அவர் உத்தரவிட்டார்.

புயலின் தாக்கத்தால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அத்தியாவசிய மருந்துகளையும், உணவு பொருட்களையும் போதிய அளவுக்கு இருப்பு வைக்குமாறு அமித் ஷா அறிவுறுத்தினார்.

புயல் கரையைக்கடக்கும் இடங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

Next Story