விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 May 2021 2:16 AM GMT (Updated: 24 May 2021 2:16 AM GMT)

26-ந் தேதி நடைபெற உள்ள விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

புதுடெல்லி, 

விவசாயிகள் நலனுக்காக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்களுக்கு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ந் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைவதையொட்டி, வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) நாடு முழுவதும் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய தினம் போராட்டம் நடத்தவும் கோரியுள்ளது.

இந்தநிலையில், அவர்களின் போராட்ட அழைப்புக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சோனியா காந்தி (காங்கிரஸ்), தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதாதளம்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), உத்தவ்தாக்கரே (சிவசேனா), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்) ஆகியோர் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Next Story