ஆந்திரா 13 -க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு: 12 பேருக்கு தூக்கு


ஆந்திரா 13 -க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள்-கிளீனர்கள் கொன்று புதைப்பு: 12 பேருக்கு தூக்கு
x
தினத்தந்தி 25 May 2021 10:59 AM GMT (Updated: 25 May 2021 11:38 AM GMT)

13 -க்கும் மேற்பட்ட லாரிகளை கொள்ளையடித்து டிரைவர்கள்- கிளீனர்களை கொன்று புதைப்பு பிரபல தாதா உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டு உள்ளது.




விசாகபட்டினம்

2008-ம் ஆண்டில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு லாரிகள் அடிக்கடி மாயமாகின. அந்த ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து 13 லாரிகள் மாயமானது.  அவற்றின் டிரைவர்களும், கிளீனர்களும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமலும் மர்மம் நீடித்து வந்தது.இதுதொடர்பாக, பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஓங்கோல் காவல் நிலையத்தில் மட்டும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மாயமானவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும், வாகனம் மற்றும் சரக்குகளை கண்டுப்பிடித்துத் தரக்கோரி அதன் உரிமையாளர்களிடமிருந்தும் புகார்கள் குவியத் தொடங்கியது.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில்  முன்னா பாய் என்பவர்  தலைமையிலான கும்பல், ஆந்திர போலீசார்  உடையில் தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு லாரிகளை சூறையாடியது தெரியவந்தது.

2008 ஆம் ஆண்டில் பிரகாசம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் மற்றும் அவற்றின் பொருட்கள் நிறைந்த லாரிகள் காணாமல் போனது போலீசைக் குழப்பியது. தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளரான வீரப்பன் குப்புசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ஓங்கோல் போலீசார்  வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து முன்னா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.

 முன்னா பாயின் இயற்பெயர் முகமது  அப்துல் சமத். லாரிகளை மறிக்கும் இந்த கும்பல், ஓட்டுநர் மற்றும் கிளீனர்களை கொன்று தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வனப்பகுதிக்குள் உடல்களை புதைத்திருக்கின்றனர். பின்னர், லாரிகளைக் கடத்திச்சென்று அதிலுள்ள சரக்குகளை மார்க்கெட்டில் விற்பனை செய்திருக்கின்றனர். அந்த லாரிகளின் பாகங்களையும் பிரித்து விற்றுள்ளனர். காணாமல் போன 13 லாரிகளுக்கும், அவற்றின் ஓட்டுநர்களுக்கும் இதே கதி தான் ஏற்பட்டு உள்ளது. 

ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த கேங்க்ஸ்டர் முன்னா பாய், ஊரில் பெரிய மனிதராக வலம் வந்திருக்கிறார். பின்னணியில் அரசியல் செல்வாக்கும் இருந்திருக்கிறது. இந்த வழக்கில் கேங்க்ஸ்டர் முன்னா பாயை நெருங்குவதிலும், விசாரணைக்கு அவரை உட்படுத்துவதிலும் பிரகாசம் மாவட்ட போலீசாருக்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. 

ஆதாரங்களைத் திரட்டிய போலீசார், முன்னா பாயை கைது செய்ய முயன்றபோது தப்பிச் சென்றுவிட்டார். முன்னா பாயைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள்  அமைக்கப்பட்டன. பெங்களூருவில், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த முன்னா பாய் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். அவரின் கூட்டாளிகள் 17 பேரும் பிடிபட்டனர்.

இந்த வழக்கு விசாரணை ஓங்கோல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கில் தொடர்புடைய முன்னா பாய் உட்பட 18 பேரும் குற்றவாளிகள் என உறுதியானது. கூடுதல் மாவட்ட 8-வது அமர்வு நீதிபதி ஜி.மனோகர்ரெட்டி, 13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

ஐ.பி.சி 396-ன் கீழ்  முன்னா பாய் உட்பட 12 பேருக்கு மரண தண்டனையும், மேலும் 6 பேருக்கு ஐ.பி.சி 396 மற்றும் 120-பி ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஆந்திர மாநில ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நாட்டிலேயே ஒரே வழக்கில் 11 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது, இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகிறது.

Next Story