புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் கொரோனா நிவாரணம்; முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் கொரோனா நிவாரணம்; முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 May 2021 11:17 PM GMT (Updated: 26 May 2021 11:17 PM GMT)

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தலா ரூ.3 ஆயிரம் நிவாரணம்
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி 
அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3½ லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்
கொரோனா 2-வது அலை மற்றும் ஊரடங்கினால் புதுச்சேரி மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலை தணிக்கும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணமாக தலா ரூ.3 ஆயிரம் 
வழங்கப்பட உள்ளது.இதன் மூலம் அரசுக்கு 105 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். நிவாரண தொகை வழங்கப்படுவதால் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் பலனடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story