திருமணத்தில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா ; மணமகனின் தந்தை உள்பட 4 பேர் பலி
திருமண விழாவில் கலந்துகொண்ட நூறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் தொற்றுப் பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐதராபாத்
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ளது முத்தியாலகுடம் என்ற கிராமம். இங்கு கடந்த 14 ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்தது. கொரோனா பரவல், சமூக இடைவெளி, முககவசம் என அனைத்தையும் மறந்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 250 பேர் அதில் கலந்துகொண்டனர்.
விழா முடிந்ததும் ஜாலியாக அனைவரும் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறையினர், திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், சுமார் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மணமகனின் தந்தை உட்பட 4 பேர் தொற்று காரணமாக உயிரிழந்தனர். கொரோனா பயத்தில் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யக் கூட அங்குள்ளவர்கள் யாரும் முன் வரவில்லை. பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி இறுதிச் சடங்கு செய்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 100 பேர், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே இந்த மாவட்டத்தில் தொற்று பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story