பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவு: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல்


பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாளில் முடிவு: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 31 May 2021 1:33 PM GMT (Updated: 31 May 2021 1:51 PM GMT)

கொரோனா வைரஸ் பரவல்களுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து அடுத்த 2 நாட்களில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

12-ம் வகுப்பு தேர்வு

கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 11-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் 12-ம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வக்கீல் மம்தா சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

ரத்து செய்யுங்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாக தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுத செய்வதும் கடினமானது. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆதலால், 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கும், சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

3-ந் தேதிக்குள்...

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார். அப்போது வேணுகோபால் நீதிபதிகளிடம் கூறுகையில், “12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. உரிய இறுதி முடிவுகளை எடுத்து வருகிற 3-ந் தேதி தெரிவிக்கிறோம்” என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் முடிவெடுங்கள். உங்கள் கோரிக்கையின்படி 3-ந் தேதி விசாரணையை தள்ளிவைக்கிறோம். கடந்த ஆண்டு எடுத்த கொள்கையில் இருந்து நீங்கள் விலகினாலும் அதற்குரிய சரியான காரணத்தை கூற வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அதற்குரிய துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து, அனைத்து அம்சங்களையும் 3-ந் தேதி தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.


Next Story