புதிய நாடாளுமன்ற கட்டிட பணிக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


புதிய நாடாளுமன்ற கட்டிட பணிக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 1 Jun 2021 1:23 AM GMT (Updated: 1 Jun 2021 1:23 AM GMT)

புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்ட கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. மேலும் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்ட கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி அனயா மல்கோத்ரா, சோஹில் ஹாஸ்மி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை கடந்த 17-ந் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி டி.என்.படேல் அமர்வு நேற்று கூறிய தீர்ப்பு வருமாறு:-

நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகவும் உள்ளது.

இது சட்டத்துக்கு புறம்பாக கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்ட புகாரை நிராகரித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜனவரி 5-ந் தேதி தீர்ப்பளித்துள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டப்பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்பட வேண்டும். டெல்லியில் கொரோனா ஊரடங்கு குறித்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மீறும் வகையில் இல்லாததால், இந்த திட்டத்தை நிறுத்திவைக்க உத்தரவிட முடியாது.

சென்ட்ரல் விஸ்டா அவென்யூ கட்டுமான திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய வசதி செய்து தரப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு செயல்பாடுகளும் பின்பற்றப்படுவதால் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கு பொதுநல நோக்குடன் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம் என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


Next Story