மாநிலங்களிடம் 1 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தகவல்
மாநிலங்களிடம் 1 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 22 கோடி மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களிடம் 1 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தின்கீழ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மாநிலங்களின் நேரடி கொள்முதல் தடுப்பூசிகளையும் வினியோகித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 23 கோடி தடுப்பூசிக்கும் அதிகமான டோஸ்கள், மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் 21 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 22 தடுப்பூசி டோஸ்கள் (வீணானது உள்பட) பயன்படுத்தப்பட்டு விட்டன. தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் 1 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 938 தடுப்பூசிகள் கையிருப்பாக உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story