புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. உடன்பாடு: பேச்சுவார்த்தையில் ரங்கசாமி சமரசம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Jun 2021 10:50 PM GMT (Updated: 2 Jun 2021 10:50 PM GMT)

புதுச்சேரியில் அமைச்சர் பதவிகளை பகிர்வதில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே உடன்பாடு ஏற்பட்டதால் 25 நாட்களாக நடந்த இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக கடந்த 7-ந் தேதி ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அன்றே கொரோனா பாதிப்பு காரணமாக ரங்கசாமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது.

இதற்கிடையே பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. தொடர்ந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் என்.ஆர்.காங்கிரசை விட பா.ஜ.க.வின் பலம் 12 ஆக அதிகரித்தது. இதெல்லாம் ரங்கசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகள், சபாநாயகர் பதவியை கேட்டு ரங்கசாமிக்கு பா.ஜ.க. நெருக்கடி கொடுத்தது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் என்பது இதுவரை இல்லாத ஒன்று என்பதாலும், முதல்-அமைச்சர் உள்பட 6 அமைச்சர்கள் கொண்ட சபையில் சரிசமமாக பா.ஜ.க.வுக்கு இடம் கொடுப்பதிலும் உடன்பாடு இல்லை என்பதால் ரங்கசாமி சமரசம் ஆகாமல் இருந்து வந்தார்.

ஆனாலும் இந்த கோரிக்கையில் பா.ஜ.க. விடாப்பிடியாக இருந்து வந்ததால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது.

இந்தநிலையில் அமைச்சரவை பதவி இடங்கள் பகிர்வது குறித்து ரங்கசாமியுடன் டெல்லி மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

அதன்படி சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி இடங்களை பா.ஜ.க.வுக்கு விட்டுத்தர ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்மூலம் சபாநாயகர் பதவியை விட்டு தந்ததன் மூலம் பா.ஜ.க.வுடன் ரங்கசாமி சமரசம் ஆகியுள்ளார். அதேநேரத்தில் துணை முதல்-அமைச்சர் பதவியை கேட்டதில் இருந்து பா.ஜ.க.வும் சமரசமாகியுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓரிரு நாளில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி புதுச்சேரி வருகிறார். அப்போது அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்படும் இலாகாக்கள், அமைச்சர்கள், சபாநாயகராக இடம்பெறுபவர்கள் யார், யார்? என்பது பற்றிய விவரம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றது முதல் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக 25 நாட்களாக இருந்து வந்த பிரச்சினையில் தற்போது சுமுகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

Next Story