உத்தரபிரதேசம்: “தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”- மாவட்ட நிர்வாகம் அதிரடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 Jun 2021 12:17 AM GMT (Updated: 3 Jun 2021 12:17 AM GMT)

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரோசாபாத், 

கொரோனா தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என மாவட்ட தலைமை வளர்ச்சி அதிகாரி சார்சிட் கவுர் அறிவித்துள்ளார்.

மாவட்ட மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்திரா விஜய் சிங், வாய்மொழியாக தடுப்பூசி இல்லையென்றால் சம்பளம் இல்லை என்று கூறியதை மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்துவதாக அவர் கூறினார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டு, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மே மாத சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மாவட்ட கருவூல அதிகாரி மற்றும் பிற துறை தலைமை அதிகாரிகள், தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை சேகரிக்கத்தொடங்கி உள்ளனர். இதையடுத்து அரசு ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை நிறுத்திவிடுவார்களோ என்று தடுப்பூசி போட விரைந்துள்ளனர் என்றும் அதிகாரி சார்சிட் கவுர் கூறி உள்ளார்.

Next Story