கொரோனா பரவலை தடுப்பதை விட நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம்: அமர்தியா சென் குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jun 2021 2:58 AM GMT (Updated: 6 Jun 2021 2:58 AM GMT)

கொரோனா பரவலை தடுப்பதை விட தனது செயலுக்காக நற்பெயரை தேடுவதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டியது என்று பொருளாதார நிபுணர் அமர்தியா சென் குற்றம் சாட்டினார்.

மும்பை,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை உச்சக்கட்டத்தை எட்டியபோது தினசரி தொற்று பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி இருந்தது. மேலும் தினமும் சுமார் 4 ஆயிரத்து 500 பேரை கொரோனா காவு வாங்கியது.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலையை நாடு கையாண்ட விதத்தை நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவில் வாழும் இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணருமான அமிர்தியா சென் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நடந்த ராஷ்டிர சேவா தளம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், “கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா சிறந்த களமாக உள்ளது. காரணம், வலிமையான மருந்து தயாரிப்பு கட்டமைப்பு, அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களை இந்தியா கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவின் குழப்பமான அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை விட, தனது செயல்பாடுகளை மிகுதியாக வெளிக்காட்டிக்கொண்டு நற்பெயரை தேட ஆர்வம் காட்டியது.

இந்தியா உலகை காக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி, அதை உலகம் முழுவதும் பரப்ப முயற்சி செய்தது. சில பிரபல நபர்கள் வெற்றிகரமான உணர்வை தொடக்கத்திலேயே வெளிக்காட்டினர். இது இந்தியாவில் பிரச்சினைகளை வளர்க்கவும், பெருத்த உயிர் சேதத்தையும் ஏற்படுத்தவும் அனுமதித்து விட்டது.

பொருளாதார பிரச்சினை, வேலையின்மை பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டன. செயல்பாடுகளை மிகுதியாக காட்டிக்கொண்டதன் மூலம் புதிய பிரச்சினைகள் உருவாக வழிவகுத்து விட்டது. அரசில் நிலவிய குழப்பங்கள், மோசமான செயல்பாடுகள் காரணமாக இந்தியாவால் தனது வலிமையை காட்ட முடியவில்லை. இது நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது” என்று அவர் கூறினார்.

Next Story