மும்பையில் இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கிய பேருந்து சேவைகள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Jun 2021 3:07 AM GMT (Updated: 7 Jun 2021 3:07 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மும்பை, 

கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய சதவீதத்தை வைத்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட, மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு சதவீதம் 5-க்கு கீழும், ஆக்சிஜன் படுக்கைகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பகுதிகள் 1-வது பிரிவில் வருகின்றன. இந்த பகுதிகளில் ஏறக்குறைய முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2, 3, 4-வது பிரிவு பகுதிகளிலும் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் மும்பை 3-வது பிரிவில் வருகிறது. இங்கு பூங்கா, விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தொற்று நோய் பாதிப்பு சதவீதம் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகள் கடைசி பிரிவில் (5-வது பிரிவு) வருகின்றன. இங்கு அத்தியாவசிய கடைகளை திறக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையே முதல் நான்கு பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநில அரசு அறிவித்து உள்ள தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) நடைமுறைக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் மும்பையில் பேருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. முன்னதாக உள்ளூர் பேருந்து சேவை இன்று (திங்கள்கிழமை) முதல் மீண்டும் தொடங்கும் என்று பிரஹன் மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்து சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் எந்தவொரு பேருந்திலும் உள்ள மொத்த எண்ணிக்கையை விட பாதி அளவில் பயணிகளின் எண்ணிக்கை இருக்கும் என்றும், ஒவ்வொரு பயணியும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், “மராட்டியத்தில் ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படவில்லை. 3-வது அலை அச்சுறுத்தல் வெகுதூரத்தில் இல்லை. எனவே தற்போது 5 வகை தளர்வுகள் செய்யப்பட்டாலும், மாநிலத்தில் எந்த இடத்திலும் பொதுமக்கள் திரளாக கூட அனுமதிக்கக்கூடாது. மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் கொரேனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து கூடுதல் தளர்வுகள், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளூர் நிர்வாகங்கள் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

Next Story