கொரோனா 2-வது அலை; ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு


கொரோனா 2-வது அலை; ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 6:26 PM GMT (Updated: 7 Jun 2021 6:26 PM GMT)

ஆந்திரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் கொரோனா ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

அமராவதி,

நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகம் தணிந்து வந்தாலும், முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் அதுதொடர்பான ஊரடங்கை மாநில அரசுகள் நீட்டித்து வருகின்றன.

இந்நிலையில், ஆந்திரபிரதேசத்தில் ஊரடங்கு வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார். மாநிலத்தில் கொரோனா சூழ்நிலை குறித்த உயர்மட்ட குழு கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதேநேரம், ஜூன் 10-ந்தேதிக்கு பிறகு தினமும் பிற்பகல் 2 மணி முதல் காலை 6 மணி வரைதான் ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், கடைகளை மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படுவதாகவும் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் நேற்று அறிவித்தார்.

சனிக்கிழமை உள்ளிட்ட வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போதைய ஊரடங்கு இன்று (ஜூன் 8-ந் தேதி) காலை 6 மணிக்கு முடிவுக்கு வந்த நிலையில், அம்மாநிலத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி காலை 6 மணி வரை, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில தலைமைச்செயலாளர் ஓம் பிரகாஷ் நேற்று முன்தினம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தார்.

Next Story