44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு


44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jun 2021 12:29 PM GMT (Updated: 8 Jun 2021 12:29 PM GMT)

44 கோடி கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கும் என்றும், ஜூன் 21ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே ஏற்று முழுமையாக நடத்தும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (திங்கள்கிழமை) தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 44 கோடி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கான கொள்முதல் உத்தரவை மத்திய அரசு இன்று பிறப்பித்துள்ளது.

இதன்படி மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் நடப்பாண்டு டிசம்பர் மாதம் வரை கிடைக்கும் என்றும், 30 கோடி பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், “தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 44 கோடி தடுப்பூசி மருந்து வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. சீரம் இந்தியா நிறுவனத்திடம் இருந்து 25 கோடி கோவிஷீல்டு தடுப்பு ஊசி கொள்முதல் செய்கிறது. அதே போல பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மருந்து 30 கோடி டோஸ் வாங்க மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.

30 கோடி பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பருக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்க ரூ.1500 கோடி மத்திய அரசு செலுத்தி உள்ளது. மூன்று நிறுவனங்களும் இருந்து கொள்முதல் செய்யும் 74 கோடி டோஸ் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை டிசம்பர் இறுதி வரை இரு நிறுவனங்களும் சப்ளை செய்யும். தடுப்பூசிக்கான 30 சதவீத தொகையை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி விட்டது” என்று அவர் தெரிவித்தார். 

Next Story