கொரோனா நிவாரணப் பணி விவரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் - எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் வலியுறுத்தல்
கொரோனா நிவாரணப் பணி விவரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள் என்று எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்களின் கஷ்டமான நேரத்தில் நீங்கள் உங்களின் பெரும்பாலான நேரத்தை அவர்களுக்கு உதவுவதில் கழித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இன்னலில் உள்ள குடிமக்களுக்கு நீங்கள் தார்மீக ஆதரவை அளித்தது மட்டுமின்றி, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முழு முயற்சி மேற்கொண்டுள்ளீர்கள்.
மக்களின் பிரதிநிதிகளாக, இந்தக் கடுமையான நெருக்கடியில் மக்களுடன் நிற்பதும், எல்லாவகைகளிலும் அவர்களுக்கு உதவுவதும் நாடாளுமன்றவாதிகளின் கடமை.
கொரோனா காலத்தில் உங்களின் முக்கியமான நிவாரணப் பணி விவரங்கள், அனுபவங்களை முழு நாட்டுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது, எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகளை தேசிய அளவில் கையாள சிறந்த நடைமுறைகளை உருவாக்க உதவும்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி எம்.பி.யான ஓம் பிர்லா, தனது தொகுதியைச் சேர்ந்த, மருத்துவ அல்லது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், கொரோனாவால் பெற்றோர் அல்லது குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை இழந்திருந்தால், அவர்களுக்கு இலவச பயிற்சியும், தங்குமிடமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story