லடாக் எல்லையில் 22 சீன போர் விமானங்கள் பயிற்சி


லடாக் எல்லையில் 22 சீன போர் விமானங்கள் பயிற்சி
x
தினத்தந்தி 9 Jun 2021 5:20 AM GMT (Updated: 9 Jun 2021 5:20 AM GMT)

சீனாவின் எல்லைப்பகுதி விமானப்படைத் தளங்களில் இருந்து புறப்பட்டு வந்து சீன விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.

புதுடெல்லி

கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள 50 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள், அங்கு நிலவும் கடும் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சுழற்சி முறையில் 90 சதவீதம் வீரர்களை மாற்றி சீன ராணுவம் சமாளித்து வருகிறது. 
கடந்தாண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இதனால், இருதரப்பு படையினர் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் சுமார் 45 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.ஆனால் இதனை சீனா மறுத்து வருகிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, பிங்கர் பகுதிகளில் இரு படைகளும் குவிக்கப்பட்டன. லடாக் எல்லையிலும் சீனா 50,000 வீரர்களை களமிறக்கியது. அதே எண்ணிக்கையில் இந்தியாவும் வீரர்களை நிறுத்தி இருக்கிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.   இதையடுத்து, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும், வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி படைகள் வாபஸ் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, பாங்காங் திசோ, பிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் பின்வாங்கப்பட்டு உள்ளன.

ஆனாலும், லடாக் எல்லையில் நிறுத்தப்பட்ட படைகள் வாபஸ் பெறப்படவில்லை.இந்நிலையில், கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் 22 போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இதனை இந்தியப் படைகள் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

எல்லையில் படைக்குவிப்பு தொடர்பாக இருதரப்பிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டு ஓராண்டாகிய பின்னர், பதற்றம் குறைக்கப்பட்ட போதும் சீனப் படைகள் குறையவில்லை. இந்நிலையில், ஜே 11, ஜே 16 போர் விமானங்கள் இந்திய எல்லைக்கு நேர் எதிராக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன.

அனைத்து வகை விமானங்களும் இயங்கும் வகையில் அண்மையில் மேம்படுத்தப்பட்ட சீனாவின் எல்லைப்பகுதி விமானப்படைத் தளங்களான ஹோட்டான், கர் குன்சா , கஷ்கர் போன்ற இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து சீன விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. தங்கள் எல்லைக்குட்பட்டு  பயிற்சிகளை செய்ததாக சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவும் தனது மிக் 29, சுகோய் 30 ரபேல் விமானங்களை எல்லையில் முன்கள விமானப்படைத்தளங்களில் நிறுத்தி வைத்துள்ளது.     

Next Story