கிடுகிடுவென உயரும் பெட்ரோல்,டீசல் விலை - 7 நகரங்களில் ரூ.100-ஐ கடந்தது


கிடுகிடுவென உயரும் பெட்ரோல்,டீசல் விலை - 7 நகரங்களில் ரூ.100-ஐ கடந்தது
x
தினத்தந்தி 10 Jun 2021 3:09 AM GMT (Updated: 10 Jun 2021 4:20 AM GMT)

நாட்டின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 106.64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதற்கு அடுத்தபடியாக மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பெட்ரோல் லிட்டருக்கு 103.78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், அம்மாநிலத்தின் போபாலில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 103.71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் நகரில் பெட்ரோல் லிட்டருக்கு 103 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒருலிட்டர் பெட்ரோல் 102.14 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் பெட்ரோல் லிட்டருக்கு 101.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, மும்பையில் ஒருலிட்டர் பெட்ரோல் 101.76 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 7 நகரங்களில் பெட்ரோல் விலை 100- ரூபாயை கடந்துள்ளது.

அதேபோல், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 99.31 ரூபாய்க்கும், தமிழ்நாட்டில் கடலூரில் 98.89 ரூபாய்க்கும், கர்நாடகாவின் பெங்களூருவில் 98.75 ரூபாய்க்கும் ஒருலிட்டர் பெட்ரோல் விலை விற்பனை செய்யப்படுகிறது.

டீசலை பொறுத்தவரை லிட்டர் ராஜஸ்தானின் கங்கா நகரில் 99.50 ரூபாய்க்கும், ஜெய்ப்பூரில் 95.37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்தியபிரதேச இந்தூரில் டீசல் லிட்டருக்கு 95.14 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் டீசல் லிட்டருக்கு 95.09 ரூபாய்க்கும் விற்பனையாகுகிறது.

தமிழ்நாட்டில் ஒருலிட்டர் டீசல் கிருஷ்ணகிரியில் 93.36 ரூபாய்க்கும், கடலூரில் 93.02 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்கள் (பங்குகள்) முன் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (ஜூன் 11) போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story