முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கவில்லை; மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி


முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து முடிவு எடுக்கவில்லை; மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2021 6:27 PM GMT (Updated: 10 Jun 2021 6:27 PM GMT)

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்றுவது குறித்து பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கவில்லை என்று மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறினார்.

பதவி விலக தயார்
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை நீக்கிவிட்டு புதிய தலைவர் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சி.பி.யோகேஷ்வர், பசனகவுடா பட்டீல் யத்னால் உள்பட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், பா.ஜனதா மேலிடம் விரும்பினால் பதவி விலக தயார் என்று எடியூரப்பா அறிவித்தார். எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எடியூரப்பாவை மாற்றுவது...
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரை மாற்ற மேலிடம் முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் கற்பனையானவை. எடியூரப்பாவை மாற்றுவது குறித்து பா.ஜனதா மேலிடம் முடிவு எடுக்கவில்லை. கட்சி மேலிடம் கூறினால் பதவி விலக தயார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.கட்சியின் முடிவுகளுக்கு தலைவணங்கி நாங்கள் அனைவரும் பணியாற்றுகிறோம். இது கட்சி மீது அவருக்கு இருக்கும் ஈடுபாட்டு உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாறு அருண்சிங் கூறினார்.

சிக்கல் இல்லை
முதல்-மந்திரி மாற்றம் குறித்த தகவலை மேலிட பொறுப்பாளரே மறுத்துள்ளதால், எடியூரப்பா பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை என்று தெளிவாகியுள்ளது. ஆயினும், மீதமுள்ள 2 ஆண்டுகளும் எடியூரப்பாவே முதல்-மந்திரி பதவியில் நீடிப்பர் என்று அவர் குறிப்பிடவில்லை. இதனால் வரும் நாட்களில் எடியூரப்பா மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்பதை அவர் மறைமுகமாக கூறுவதாக கருதப்படுகிறது.அருண்சிங் மிக விரைவில் கர்நாடகம் வரவுள்ளார். அப்போது அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டும்படி எடியூரப்பாவுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Next Story