தடுப்பூசியை வீணாக்குவதில் ஜார்கண்ட் முதலிடம்: மத்திய அரசு தகவல்


தடுப்பூசியை வீணாக்குவதில் ஜார்கண்ட் முதலிடம்: மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 10 Jun 2021 6:37 PM GMT (Updated: 10 Jun 2021 6:37 PM GMT)

கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் தடுப்பூசியை சேதாரமின்றி போட்டு வரும் நிலையில், தடுப்பூசியை வீணாக்குவதில் ஜார்கண்ட் மாநிலம் முதலிடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

வீணாகும் டோஸ்கள்

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. பல்வேறு கட்டங்களாக தடு்ப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.இவ்வாறு பெறப்படும் தடுப்பூசிகளை மாநிலங்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் மக்களுக்கு பயன்படுத்தி வருகின்றன. எனினும் பல மாநிலங்களில் தடுப்பூசி டோஸ்கள் அதிக அளவில் வீணாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மத்திய அரசுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.


வீணாக்கும் மாநிலங்கள்

இந்த நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கும் மாநிலமாக ஜார்கண்ட் மாநிலம் அறியப்பட்டு உள்ளது. அங்கு 33.95 சதவீத தடுப்பூசி டோஸ்கள் வீணாகி இருப்பதாக அரசு கூறியுள்ளது.இதைப்போல சத்தீஸ்கார் 15.79 சதவீதம், மத்திய பிரதேசம் 7.35 சதவீத டோஸ்களை வீணாக்கியுள்ளன. பஞ்சாப் (7.08), டெல்லி (3.95), ராஜஸ்தான் (3.91), உத்தரபிரதேசம் (3.78), குஜராத் (3.63), மராட்டியம் (3.59) போன்ற மாநிலங்களும் தடுப்பூசி டோஸ்களை வீணாக்கி இருக்கின்றன.

கேரளா, மேற்கு வங்காளம்

இப்படி பல மாநிலங்கள் தடுப்பூசியை வீணாக்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்கள் ஒரு டோசையும் வீணாக்காமல், வீணாகும் டோஸ்களாக கணக்கிடப்படும் தடுப்பூசியை கூட போட்டு சாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அந்தவகையில் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்த மாநிலங்களில் வீணாகும் தடுப்பூசி விகிதம் முறையே -6.37 சதவீதம், -5.48 சதவீதம் என எதிர்மறை விகிதத்தில் உள்ளன.

முதல் டோஸ் போட்டவர் விகிதம்

மத்திய அரசு கடந்த மாதம் 7.91 கோடி தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருக்கிறது.கடந்த 7-ந்தேதி வரை நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 38 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் திரிபுராவில் 92 சதவீதமும், ராஜஸ்தான், சத்தீஸ்காரில் தலா 65 சதவீதம், குஜராத்தில் 53 சதவீதம், கேரளாவில் 51 சதவீதம், டெல்லியில் 49 சதவீதம் போடப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டை பொறுத்தவரை 19 சதவீதத்தினரே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதேநேரம் ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 24 சதவீதமும், பீகாரில் 25 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.


Next Story